பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன்: திருமாவளவன் பேட்டி

சென்னை: பெரியார் எந்த இடத்திலும் ராமர் படத்தையும், சிலையையும் அவமதிக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிழையை உணர்வார், அதற்காக வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் போரூர், மதுரவாயல் சுற்று வட்டார மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் போரூர் ரவுண்டானா அருகே நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் பேட்டியளிக்கையில், ‘‘பிப்ரவரி 15ம் தேதி தேசம் காப்போம் என்ற பேரணி திருச்சியில் நடத்த போகிறோம். இந்த சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும். தந்தை பெரியார் எந்த இடத்திலும் ராமர் படத்தையும், சிலையையும் அவமதிக்கவில்லை. அதற்கான சான்றுகள் இல்லை. அந்த விளக்கத்தை திராவிடர் கழக தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக கூறி இருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிழையை உணர்வார் என்றும் அதற்காக வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன்’’ என்றார்.

Related Stories: