நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறை நிர்வாகம் கோரிக்கையை ஏற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்துள்ளது. முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஆவணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை ரத்து செய்யக் கோரி முகேஷ் தொடர்ந்த வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் நிர்பயா என்ற 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, பின்னர் பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி 12 நாட்களுக்கு பின் மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார்.

மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பாக ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களில் அந்த சிறுவன் மீதான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கப்பட்டது. இளம் குற்றவாளியான அந்த சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து அவன் பின்னர் விடுதலை ஆனான்.

இதற்கிடையே வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது ராம் சிங், திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த தனிக்கோர்ட்டு முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இந்த தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. அதன்பிறகு, மரண தண்டனையை உறுதி செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்த நிலையில், அக்‌ஷய் குமார் சிங் தனியாக மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு பின் அக்‌ஷய் குமார் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், அவரது மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் பவன் குப்தா மனுத்தாக்கல் செய்துள்ளார்.  பவன் குப்தா, நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவர் ஆவார். 2012-ல் நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட போது தமக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று  பவன் குப்தா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: