ஈராக்கில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் : 11 வீரர்கள் காயம் என தகவல்

மில்வாகி: ஈராக்கில் கடந்த வாரம் 2 ஈரான் தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிபர் ட்ரம்ப் அமெரிக்க வீரர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை என்று கூறியிருந்த நிலையில் தற்போது 11 வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் குத்ஸ் பிரிவு தளபதி காஸ்சிம் சுலைமானி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க படை நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், ஈரானுக்கு கடும் ஆத்திரமூட்டியது. அமெரிக்காவை பழி வாங்கியே தீருவோம் என அந்நாட்டின் உச்ச தலைவர் காமேனெய் மிரட்டல் விடுத்திருந்தார்.

அதே சமயம், ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் உடனடியாக வெளியேற வேண்டுமென அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனால், அமெரிக்க ராணுவம் வெளியேறவில்லை. சுலைமானி மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு அவரது உடல் ஈரானில் அடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக ஈரான் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கியது.

ஈராக்கின் இர்பில், அல் அஸ்சாத் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இரு தளங்களிலும் 22 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இதில் 80 அமெரிக்க வீரர்கள் பலியாகி விட்டதாகவும் ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால், இதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் தாக்குதல் நடத்தியது உண்மை தான். ஆனால் அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை என்றும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஈரான் தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: