புதுடெல்லி: ‘காஷ்மீரில் சகஜநிலை திரும்பி விட்டதாக கூறும் மத்திய அரசு, அங்கு 36 அமைச்சர்கள் கொண்ட குழுக்களை அனுப்புவது ஏன்?’ என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்துள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில், நாளை முதல் வரும் 24ம் தேதி வரை இந்த யூனியன் பிரதேசங்களில் சுற்றுப் பயணம் செய்து, சிறப்பு அதிகாரம் ரத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த 36 மத்திய அமைச்சர்களை அங்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.