பல்லாவரம்: மாங்காடு அடுத்த கோவூர், அனு கார்டனை சேர்ந்தவர் யுவராஜ் (28). பெயின்டர். முறையாக பைனான்ஸ் கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலையும் செய்து வந்தார். இவர், கடந்த 13ம் தேதி இரவு அதேபகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, கடைசியாக யுவராஜ் செல்போனுக்கு பேசிய அவரது நண்பர் அப்பு (எ) தாமோதரன் (23) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து யுவராஜை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின்படி, அதே பகுதியை சேர்ந்த ஜெகன்நாதன் (எ) ஜெகன்(23), முத்து (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், யுவராஜ் உள்பட நாங்கள் 4 பேரும் நண்பர்கள். ஒன்றாக வேலைக்கு சென்று வந்தோம். அப்போது, யுவராஜ் தான் சொல்லும்படிதான் நடக்க வேண்டும் என எங்களுக்கு கட்டளையிட்டார். இதை நாங்கள் ஏற்க மறுத்தால் அடித்து உதைத்தார். இதனால், கடந்த 13ம் தேதி யுவராஜுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்தோம். போதை தலைக்கு ஏறியதும், ஏற்கனவே தயாராக மறைத்து வைத்திருந்த அரிவாளால், அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தோம் என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.