தஞ்சை: தஞ்சை வடக்குவாசல் பழைய நெல்லுமண்டி தெருவை சேர்ந்தவர் செபஸ்டின்(30). கூலித்தொழிலாளி. இந்த பகுதியினருக்கும், அருகில் உள்ள வடக்கு வாசலை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் பொங்கலன்று வடக்கு வாசலை சேர்ந்த செல்வம் (எ) செல்வகுமார், வெங்கடேஸ்வரன், பச்சைக்கிளி(எ) சூர்யா, சுந்தர்(எ) சுந்தரமூர்த்தி ஆகியோர் அவ்வழியாக சென்றனர். இதை செபஸ்டின் தட்டிக்கேட்டார். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது தவறிவிழுந்த பச்சைக்கிளியின் செல்போனை செபஸ்டின் எடுத்து வைத்திருந்தார். அதை கொடுப்பதற்காக சுடுகாடு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு செபஸ்டின் சென்றார். அப்போது டாஸ்மாக் வாசலில் மீண்டும் 5 பேர் இடையே தகராறு ஏற்பட்டது.அங்கிருந்த நெல்லுமண்டி தெருவை சேர்ந்த சக்திவேல் (36) சமரசம் செய்துள்ளார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த 4 பேரும், அரிவாளால் செபஸ்டினையும் சக்திவேலையும் வெட்டி கொலை செய்தனர்.
காம்பவுண்ட் சுவர் தகராறில் தந்தை, மகள் கொலை: நெல்லை மேலப்பாளையம், வேடவர் காலனியை சேர்ந்தவர் தங்கமுத்து (55), கூலி தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயராஜிக்கும் (51) காம்பவுண்ட் சுவர் தொடர்பாக பிரச்னை கோர்ட்டில் இருந்தது. இதில் தங்கமுத்துவுக்கு சாதகமாக தீர்ப்பானதால் அவர் சுவரில் வெள்ளையடித்து உள்ளார். அப்போது அங்கு வந்த ஜெயராஜ், அவரது மகன்கள் ராஜ்குமார் (28), அந்தோணி (23) ஆகியோர் தங்கமுத்துவையும், அவரது மகள் சுமதியையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். ஜெயராஜ் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பீர்பாட்டிலால் குத்தி கொலை: திருச்செந்தூர் -அடைக்கலாபுரம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் சரக்கு வாங்குவதற்காக ‘குடி’மகன்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது காயல்பட்டினம் பூந்தோட்டத்தை சேர்ந்த லட்சுமணனுக்கும்(48), பாஸ்கருக்கும் (43) தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாஸ்கர், பீர்பாட்டிலை உடைத்து லட்சுமணனின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் அங்கேயே துடிதுடித்து இறந்தார்.