திமுக-காங்கிரஸ் இடையே எந்த விஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: திமுக, காங்கிரஸ் இடையே எந்த விஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை என கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணி விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைவர் ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் எனக்கு நல்ல உறவு உண்டு. நல்ல புரிதலும் உண்டு. இரண்டு கட்சிகளிலுமே கீழ் நிலையில் உள்ளவர்களுக்கு பல சிரமங்கள் இருக்கின்றன. போதுமான இடங்களை பெறவில்லை என்ற ஆதங்கம், கீழ் நிலையில் உள்ளவர்களிடம் இருக்கிறது. இடங்களை கொடுக்க முடியாமல் அவர்களும் சிரமப்படுகின்றனர். இதுதான் உண்மை நிலை. திமுக தலைமை அறிவுறுத்தியும் கூட சில இடங்கள் காங்கிரசுக்கு வழங்கப்படவில்லை.

அதற்கு கட்சி தலைமை காரணம் அல்ல. அங்குள்ளவர்கள்தான் காரணம். சிரமங்களை சொல்ல வேண்டியது எங்கள் கடமை,  நான் கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல. ஒரு தாய் பொறுப்பில் இருந்து கட்சியை வழி நடத்தவேண்டும். கட்சிக்காரர்களின் சிரமங்களை எடுத்துச் சொல்வது. கட்சியினரின் சிரமங்களை எடுத்து சொல்லவில்லை என்றால் என்னை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் எந்த விஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் அவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. உள்ளாட்சி  தேர்தலில் ஏற்பட்ட சங்கடத்தைத்தான் சொல்கிறோம். இதில் தவறு இல்லை. திமுகவுக்கு சங்கடங்கள் வந்திருக்கலாம். காலம் எப்போதும் நல்ல பதிலைதான் சொல்லும்.

Related Stories: