சென்னை: சர்வதேச அளவிலான சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் சென்னையில் நாளை தொடங்குகிறது. தமிழ்நாடு சதுரங்க சங்கம், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு இணைந்து சர்வதேச அளவில் டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான 12வது சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியை நடத்த உள்ளது. இந்தப்போட்டி சென்னை, சோழிங்கநல்லூரில் நாளை முதல் ஜன.25ம் தேதி வரை நடக்கும். போட்டிகள் மொத்தம் 10 சுற்றுகளாக நடக்கும். இந்தியா, மலேசியா, ரஷ்யா, பெல்ஜியம் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள், பெண் கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச பெண் மாஸ்டர்கள் உட்பட பலர் போட்டியில் பங்கேற்பார்கள். போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.3லட்சம், 2வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.2லட்சம், 3வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1.25லட்சம் என மொத்தம் 15லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இப்படி 40வது இடம் பிடிப்பவர் வரை ரொக்கப்பரிசு கிடைக்கும். மேலும் போட்டியில் வெல்பவர்களுக்கு சர்வதேச தரப்புள்ளிகளும் கிடைக்கும்.