புதுடெல்லி: மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனியார் செய்தி ஊடகத்தின் சார்பில் கேட்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, விைளயாட்டு போட்டியில் பங்கேற்கும் மாணவிகள், வீராங்கனைகள் ஆகியோர் பல்வேறு தளங்களிலும் பயிற்சியாளர் உள்ளிட்டோரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் விவரங்களில் புகார்களாக பதிவு செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஜூலை 2014ல் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து சிறுமிகள் தங்களது பயிற்சியாளர் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டினர். அந்த சிறுமிகளின் வயது 14-15 வரை இருந்தது. பயிற்சியாளரின் வயது 50. சிறுமிகளின் உடல் அளவீடுகளை எடுக்கும் சாக்குப்போக்கில் தகாத முறையில் அவர்களின் உடல்பாகங்களை தொட்டதாகவும், அவர்களின் மேற்சட்டையை கழற்றும்படி உத்தரவிட்டதாகவும், மற்றொரு சிறுமியை முத்தமிட முயன்றதாகவும் புகார் எழுந்தது. நீண்ட நாட்களுக்கு பின் சிறுமிகள் அளித்த புகாரின்படி, பயிற்சியாளருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இது நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரு நிகழ்வு என்றாலும், பல புகார்களில் நடவடிக்கை இல்லை.