ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி : ரிஷப் பந்த் விலகல்

ராஜ்கோட் : இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டியில் நடக்கிறது.

இந்நிலையில் முதல் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 25 ரன்கள் அடித்த போது கம்மின்ஸ் வேகத்தில் அவுட்டானார். கம்மின்ஸ் வீசிய பந்து பந்த்தின் பேட்டில் பட்டு, பின் ஹெல்மெட்டில் பட்டு அதை டர்னர் கேட்ச் பிடித்தார். அப்போது பந்த்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், தொடர்ந்து அவருக்கு மூளை அதிர்வு ஏற்பட்டதாக தெரியவந்தது.

இதனால் இந்தியா அணி பந்து வீசிய போது விக்கெட்ட கீப்பிங் பணிக்கு ரிஷப் பந்த்  வரவில்லை அவருக்கு பதிலாக ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். காயமடைந்த பந்துக்கு பதிலாக மாற்று வீரராக மணீஷ் பாண்டே களமிறங்கினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் நேற்று ராஜ்கோட் சென்ற நிலையில், ரிஷப் பந்த் விதிகளின் படி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மூளை அதிர்வு காயத்துக்கான மாற்று வீரர் விதியை ஐசிசி அமல்படுத்திய பின் இந்திய அணியில் காயமடைந்த முதல் வீரர் ரிஷப் பந்த் தான் என்பது குய்ப்பிடத்தக்கது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூளை அதிர்வு காரணமாக பந்த் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். சிகிச்சைக்கு பின் தான் கடைசி ஒருநாள் போட்டியில் பந்த் பங்கேற்பாரா அல்லது பங்கேற்கமாட்டாரா என்பது தெரியவரும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: