மாங்காடு அருகே பரபரப்பு: பெயின்டர் சரமாரியாக வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு வலை

பல்லாவரம்: மாங்காடு அருகே பெயின்டர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மாங்காடு அடுத்த கோவூர், அனு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (28). அதே பகுதியில் பெயின்டர் வேலை செய்து வந்தார். மேலும், முறையாக பைனான்ஸ் கட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலையும் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியில் சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் நேற்று காலை யுவராஜ் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடப்பது தெரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார், யுவராஜ் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், யுவராஜ் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கும், அவரது மனைவியின் உறவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அவரது மனைவியின் உறவினர்கள் யுவராஜை கொலை செய்தனரா அல்லது பைனான்ஸ் கட்டாத வாகனங்களை யுவராஜ் பறிமுதல் செய்தபோது, ஆத்திரமடைந்த வாகன உரிமையாளர்கள் யாரேனும் அவரை கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட இடத்தில் காலி மது பாட்டில்கள் கிடந்ததால், இரவு மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொலையாளிகள் யுவராஜை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளை அதே இடத்தில் விட்டுச் சென்றது தெரிய வந்தது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். பெயின்டர் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: