சாயல்குடி: சாயல்குடி பகுதியில் தண்ணீரின்றி நிலக்கடலை, மிளகாய் பயிர்கள் கருகி வருவதால், அவற்றை காப்பாற்ற விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி தூர்களில் தெளித்து வருகின்றனர். கடலாடி தாலுகாவில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், அதற்கு அடுத்தப்படியாக மிளகாய், மல்லி, பருத்தி, நிலக்கடலை பயிரிடப்படுகிறது. சாயல்குடி அருகே உள்ள இதம்பாடல், எஸ்.தரைக்குடி, டி.எம்,கோட்டை, பெருநாழி, உச்சிநத்தம், கொண்டுநல்லான்பட்டி, முத்துராமலிங்கபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரிசல் மண் நிலத்தில் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் பருவமழை பெய்யும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் துவங்குவது வழக்கம். இந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் பருவமழை நன்றாக பெய்தது. இதனால் விவசாயிகள் மிளகாய், மல்லி, நிலக்கடலை ஊடு பயிராக வெங்காயம் போன்ற பயிர்களை பயிரிட துவங்கினர். களையை அகற்றுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல், உரம் போடுதல் போன்ற பணிகளை செய்து வந்தனர்.