வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டம்!

நன்றி குங்குமம்

புது வருடம் பிறந்துவிட்டது. உலகெங்கும் பட்டாசு வெடித்து கோலாகலமாக புத்தாண்டைக் கொண்டாடினார்கள். ஆனால், சில நாடுகளில் வித்தியாசமான முறையில் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.

சிலி

காலி சூட்கேஸை எடுத்துக்கொண்டு தெருத் தெருவாக நடப்பார்கள் சிலி மக்கள். புத்தாண்டு அன்று அப்படி நடப்பதால் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான அதிர்ஷ்டம் அடிக்குமாம். இப்படி வேகமாக நடப்பவர்கள், தொலை தூரம் பயணம் செய்வார்கள் என்பது சிலி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஸ்காட்லாந்து

கிறிஸ்துமஸ் முடிந்த இரண்டாவது நாளிலிருந்தே புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆரம்பமாகி விடும். ஒரு பாரம்பரிய திருவிழாவைப் போல ஐந்து நாட்களுக்குப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் ஸ்காட்லாந்து மக்கள்.  போர் வீரர்களைப் போல உடை அணிந்து கொண்டு கையில் தீப்பந்தத்தை ஏந்தி தெருவில் ஊர்வலம் வருவது இதில் முக்கியமான நிகழ்வு. புது வருடம் ஆரம்பிக்கும் நாட்களில் தெருக்களில் கும்பலாக நெருப்பைச் சுழற்றி வருவதால் தீய சக்திகள் விரட்டியடிக்கப்படும் என்று ஸ்காட்லாந்து மக்கள் நம்புகிறார்கள்.

தென்னாப்பிரிக்கா

ஜோகன்ஸ்பர்க் நகரில் வீட்டிலுள்ள பழைய மரச்சாமான்களை, பாத்திரங்களை, துணிகளை வெளியே வீசுவது புத்தாண்டு வழக்கம். இப்படிச் செய்வதால் பழைய விஷயங்கள் அழிந்து புதியன புகும் என்பது அவர்களது நம்பிக்கை. இதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தாலும் பர்னிச்சரை உடைப்பதை தென்னாப்பிரிக்க மக்கள் இன்னும் கைவிடவில்லை.

ருமேனியா

புது வருடத்தின் முதல் நாளில் ருமேனியா விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளிடம் பேச்சுக் கொடுப்பார்கள். விவசாயிகள் பேசியதற்கு பதில் அளிப்பதைப் போல கால்நடைகள் சத்தம் எழுப்பினால் நல்ல சகுனமாம். இதுபோக நாணயங்களை ஆற்றில் வீசுவார்கள். வீடுவீடாக சென்று நடனமாடி இசைக்கருவிகளை இசைப்பது ருமேனியர்களின் வழக்கம். இந்த விநோத கொண்டாட்டம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நடைபெற்றுவருகிறது.

த.சக்திவேல்

Related Stories: