சென்னை: தமிழக அரசியலில் கூட்டணி என்பது அவசியம் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் படைப்பாளிகள் முன்னேற்ற கட்சி நிறுவனர் ச.சரவணன், தனது கட்சியை தமாகாவுடன் இணைத்தார். அவருடன் அக்கட்சி நிர்வாகிகள் பலர் தமாகாவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என்.அசோகன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் ஏ.முருகன், சைதை மனோகரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழகத்தில் மக்கள் விரும்பும் கட்சியாக தமாகா செயல்பட்டு கொண்டிருக்கிறது. தேர்தலை மனதில் கொள்ளாமல் குறிக்கோள், கொள்கைக்காக இயங்கும் கட்சி நாங்கள் தான். தமிழக அரசியலில் கூட்டணி என்பது அவசியம். நல்ல கட்சிகளுடன் கூட்டணி வைத்து நியாயமான முறையில் களம் இறங்குவதை தான் மக்கள் விரும்புகிறார்கள். அப்படி உள்ள கட்சிகளுக்கு தான் மக்களின் அங்கீகாரம் நிச்சயம் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். வரும் காலம் நமக்கு வசந்த காலம். எனவே கட்சி, மக்கள் நலன் காக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.