பாட்னா: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து அசாம் கன பரிஷத் கட்சி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. அதேபோல், மற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திலும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவை மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போதே, அதை எதிர்த்து வாக்களிக்கும்படி ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) துணைத் தலைவரும், தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தினார்.