புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில், பாஜ எம்எல்ஏ.வால் கடத்தி, பலாத்காரம் செய்யப்பட்ட உன்னாவ் சிறுமி வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின், உன்னாவ் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாஜ. எம்எல்ஏ குல்தீப் செங்காரால் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து புகார் அளித்த சிறுமியின் தந்தை, போலீஸ் காவலில் இருக்கும் சந்தேகத்துக்குரிய முறையில் இறந்தார். மேலும், வழக்கு விசாரணைக்காக பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது உறவினர்கள், வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு சென்றபோது அவர்கள் சென்ற வாகனத்தின் மீது லாரியை மோத செய்து, எம்எல்ஏ.வின் ஆதரவாளர்கள் விபத்துக்கு உள்ளாக்கினர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக, எம்எல்ஏ. மீது, சிபிஐ 5 வழக்குகள் தொடர்ந்துள்ளது. சிபிஐ தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தர்மேஷ் ஷர்மா தெரிவித்தார். ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டது, உபி,யில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை குற்றவாளிகள் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற சம்பவங்கள் நாட்டை உலுக்கியுள்ளன. அதனால், இந்த சம்பவங்களுக்கு எல்லாம் முன்னதாக நடந்த இந்த வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.