தூத்துக்குடி: ஆண்டுதோறும் டிச.4ம் தேதி கடற்படை தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான கடற்படை வார விழாவையொட்டி தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு நேற்று முன்தினம் பி.58 சுமேதா என்ற இந்திய கடற்படை போர்க்கப்பலை வந்தது. இதனை பார்வையிட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஆயிரக்ணக்கணக்கான மாணவ, மாணவிகள், தங்களது ஆசிரியர்களுடன் வந்து போர்க்கப்பலை பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இலவசமாக பார்வையிடலாம் என கடற்படை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் அதிகாலை முதலே பொதுமக்கள் கார்கள், வேன்கள், டூவீலர்கள் என பல்வேறு வாகனங்களில் குடும்பத்தினருடன் துறைமுக கிரீன் கேட் முன்பாக குவியத்துவங்கினர். இவர்களை கடற்படையினர் பெயர், அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொண்டு அனுமதித்தனர். ஆனால், நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகமானது.