சென்னை: தமிழக சட்டப்பேரவை ஜனவரி முதல்வாரத்தில் கூடுகிறது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் அன்றைய தினம் சட்டப்பேரவையில் உரையாற்றுவார். இந்த நிலையில் 2019ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தை கடந்த ஜனவரி 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி ெதாடங்கி வைத்தார். அதன்பின்பு நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 8ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கை விவாதத்துக்கு பின்பு பிப்ரவரி 14ம் தேதி கூட்டதொடர் முடித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் துறை ரீதியான மானிய கோரிக்கை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்ட தொடர் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கி ஜூலை 20ம் தேதி வரை நடைபெற்றது.இந்த நிலையில் ஒரு சட்டப்பேரவை கூட்டதொடருக்கும் மற்றொரு கூட்ட தொடருக்குமான கால இடைவெளி 6 மாதங்களை தாண்டி இருக்க கூடாது என்பது விதியாகும். இந்த நிலையில் கடந்த ஜூலை 20ம் தேதியுடன் பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்தது. எனவே, அடுத்த கூட்ட தொடர் வரும் ஜனவரி 19ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.