குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு வீசி தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த 2 நாட்களாக டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அந்த போராட்டமானது வன்முறையாக வெடித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி கடந்த 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமையை அளிப்பதற்கு வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் கடந்த வியாழக்கிழமையன்று ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போது இந்த போராட்டமானது நாடு தழுவிய அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. டெல்லியை பொறுத்தவரை ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வருகின்ற 5ஆம் தேதி வரை அந்த பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் போராட்டத்தியின்போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 3 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்பு என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: