மேட்டூர்: மேட்டூர் அருகே மின்வேலியில் சிக்கி 60 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, விவசாயியை பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி தமிழக-கர்நாடக எல்லையில் உள்ளதால், யானைகள் அதிகளவில் உள்ளன. ஆரம்பத்தில் தந்தங்களுக்காக வேட்டையாடும் கும்பல், யானைகளை கொன்று வந்தது. ற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், யானைகள் தண்ணீர் தேடியும், உணவுக்காகவும் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.
விளைநிலங்களுக்குள் யானைகள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில், விளைநிலத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்தும், குழிகள் தோண்டியும் பயிர்களை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை பெரியதண்டா வனப்பகுதியில், தண்டாகேட் அருகில் லக்கம்பாடி ஊராட்சிக்குட்பட்ட கிமியான்காட்டுவலவு என்னும் பகுதியில், தனியார் விவசாய தோட்டத்தில் பெரிய தந்தத்துடன் கூடிய 60 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில், மேட்டூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று உயிரிழந்த யானையை பார்வையிட்டனர். பின்னர், அதனை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். மேலும், உரிய அனுமதியின்றி விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்த விவசாயியை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.