கன்னியாகுமரி: நாகர்கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை வழியாக கன்னியாகுமரிக்கு தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட வாகனங்களில், சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலையில் கொட்டாரத்தில் இருந்து விவேகானந்தபுரம் வரை உள்ள பகுதி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக காணப்பட்டது. குறிப்பாக கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் அருகே பெருமாள்புரம் பகுதியில் அதிகப்படியான விபத்துகள் ஏற்பட்டு வந்தது.
சாலையின் இரு ஓரங்களிலும் அரிப்பு ஏற்பட்டு பள்ளமானதோடு, சாலையும் குறுகலானது. இதனால் பைக்கில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுந்து படுகாயமடைவதும் அதிகரித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையிடம் அரசியல் கட்சியினர், பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் அதிகரிக்கும் விபத்தை தடுக்கவும், பொதுமக்களின் நலன்கருதியும் சாலையை சீரமைக்க கன்னியாகுமரி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் சுரேஷ், எஸ்ஐ செல்லசாமி உள்பட போக்குவரத்து போலீசார் கொட்டாரம் முதல் விவேகானந்தபுரம் வரை சாலையில் சீரமைப்பு பணியை செய்தனர். அதன்படி சாலையில் உள்ள பெரிய, சிறிய அளவிலான பள்ளங்கள் சீரமைக்கப்பட்டன. போக்குவரத்து போலீசாரின் இந்த பணியை பொது மக்கள், சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் பாராட்டினர்.