ஊட்டி அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் சாவு

ஊட்டி: ஊட்டி அருகே கடசோலை பகுதியில் காய்கறி தோட்டத்தில் மூன்று தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஊட்டியை சேர்ந்த சந்திரன் என்பவர் கடசோலை பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறார். இந்த போர்வெல் மோட்டாருக்கு அங்குள்ள வீட்டிலிருந்து விவசாய நிலம் வழியாக மின் இணைப்பு கொடுத்துள்ளார்.  இவரது தோட்டத்தில், பாலன்(45), குமார் (54), மணியம்மா (55) ஆகிய தொழிலாளர்கள் நேற்று வேலை செய்து கொண்டிருந்தனர். தோட்டத்தில் மழை நீர் தேங்கி ஈரப்பதத்துடன் இருந்துள்ளது.

அப்போது, தண்ணீர் பாய்ச்சுவதற்காக பாலன் சென்றுள்ளார்.  எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை பாலன் மிதித்ததாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதை கண்ட மணியம்மா, குமார் ஆகியோர் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுகுறித்த தகவலறிந்து மின் வாரியத்தினர் அங்கு சென்று மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர், உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து ஊட்டி புதுமந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: