வாஷிங்டன்: ‘‘நான் எந்த தவறும் செய்யாத போது, எனக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது நியாயமற்றது,’’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால், அவரது பதவியைப் பறிப்பதற்கான பதவிநீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு நாடாளுமன்ற சட்டக்குழு நேற்று முன்தினம் இரவு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, 435 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அங்கு, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால், தீர்மானம் நிறைவேறி 100 எம்பி.க்களை கொண்ட செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். செனட் சபையில், ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 பேர் உள்ளனர். கிறிஸ்துமசுக்கு முன்பாகவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.