×

ஆந்திராவில் ‘டிஷா’ சட்டம் நிறைவேறிய நாளில் சம்பவம் சிறுமியின் வாயை பொத்தி பலாத்காரம் : மாணவர் போக்சோவில் கைது

திருமலை: ஆந்திராவில் டிஷா சட்டம் நிறைவேறிய அதே நாளில் 5 வயது சிறுமி வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். தெலங்கானாவின் ஷம்சாபாத்தில் கால்நடை மருத்துவர் டிஷா கொலை வழக்கிற்கு பிறகு குற்றவாளிகளுக்கு  கடும் தண்டனை விதிக்க ஆந்திர அரசு முடிவு செய்தது. அதன்படி குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால் 21 நாட்களில் விசாரணை செய்து தூக்கு தண்டனை விதிக்கும் ‘2019 டிஷா’  சட்டம் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதே நாளில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதன் விவரம் வருமாறு:
குண்டூர் நகரில் வசித்து வரும் பெண், நேற்று முன்தினம் அரசு வழங்கும் மலிவு விலை வெங்காயத்தை வாங்குவதற்காக தனது 5 வயது மகளை வீட்டில் விட்டுச்சென்றார்.  அப்போது அந்த சிறுமி தான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் வீட்டில் டிவி பார்க்க சென்றார்.

வீட்டு உரிமையாளரின் மகனான 16 வயதுடைய இன்டர்மீடியட் முதலாமாண்டு படிக்கும் மாணவன், சிறுமியின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டினாராம். இந்தநிலையில் நேற்று காலை சிறுமி கடும் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவரது தாய் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து விசாரித்ததில் வீட்டு உரிமையாளரின் மகன் குறித்து சிறுமி கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக கன்ச்சிகசெர்லா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  டிஷா சட்டம் நிறைவேறிய அதே நாளில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Disha ,Andhra Pradesh ,incident , Andhra Pradesh, incident on the day ,Disha Mobile Act was passed
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி