புதுடெல்லி: ‘வறுமையை ஒழிக்க போராடி வருவதால், ஒருங்கிணைந்த வளர்ச்சி கொண்ட நடுத்தர வருவாய் உடைய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது,’ என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படும் விவசாயம், மருத்துவம், விமானம், கடல் ஆய்வுகள், காலணி வடிவமைப்பு, ஆடை அலங்காரம், பெட்ரோலியம், திட்டமிடுதல், கட்டிடக் கலை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 64 பிரிவுகளுக்கான மாநாடு, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
வறுமையை ஒழிக்க போராடி வருவதால் இந்தியா ஒருங்கிணைந்த வளர்ச்சி கொண்ட நடுத்தர வருவாய் உடைய நாடாகி உள்ளது. நமது சமூக, பொருளாதார இலக்குகளை அடைய, தொழில் நிறுவனங்கள் கருவியாக செயல்பட வேண்டும். நம்முடைய தேசிய இலக்கான விவசாயத்தில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் மத்திய விவசாயப் பல்கலைக் கழகங்கள் உதவ வேண்டும். அனைத்து பிரிவுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.