சென்னை: பண மோசடி, செக்ஸ் புகார், நில அபகரிப்பு வழக்குகளில் நித்யானந்தாவை போலீசார் தேடிவரும் நிலையில், அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக கூறுகின்றனர். மேலும் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நித்யானந்தா மீது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நித்யானந்தா சீடர் விஜயகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நித்யானந்தாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் கடந்த 2009ம் ஆண்டு சேர்ந்தேன். திருவாரூர், நாகை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் உள்ள நித்யானந்தாவின் மடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. என் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து 350 இளைஞர்கள் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர். யோகா, தியானம் பயிற்சி என்ற போர்வையில் நித்யானந்தா மோசடியில் ஈடுபட்டு வருவதை நாளடைவில் தெரிந்துகொண்டேன். அவர் ஒரு செக்ஸ் வெறியர். நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் பலர் ஓரினச்சேர்க்கையாளர்கள். நித்யானந்தா என்னையும் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். மாடல் அழகிகளை மயக்கி தன்னிடம் அனுப்புமாறு கூறினார்.