இந்தியா-மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-மேற்கு இந்திய தீவு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவு அணிகள் மோதும் முதல் ஒருநாள் பகல் இரவு கிரிக்கெட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் மதியம் 12.30 மணி முதல் இரவு 11 மணி வரை  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்லவும், பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லவும் தடை செய்யப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டு முடிந்தவுடன், அதாவது வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.     

காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் எம்டிசி வாகனங்கள் மற்றும் உரிய அனுமதி சீட்டு ஒட்டப்பட்ட வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.       

* கெனால் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லவும், வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்லவும் தடை செய்யப்படுகிறது.    

* அண்ணா சாலையில் இருந்து வரும் எம்.பி.டி.டபிள்யு எழுத்துக்கள் ஒட்டப்பட்ட அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் எம்.டி.சி வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை வழியாக அனுமதிக்கப்படும். பி மற்றும்  ஆர் எழுத்துக்கள் ஒட்டப்பட்ட அனுமதி பெற்ற வாகனங்கள் பெல்ஸ் சாலை செல்லாமல் எம்ஆர்டிஎஸ் மற்றும் பட்டாபிராம் நுழைவாயில் சென்று வாகன நிறுத்துமிடம் செல்லலாம்.      

* போர் நினைவு சின்னம் மற்றும் காந்தி சிலையில் இருந்து வரும் எம்.பி.டி.டபிள்யு எழுத்துக்கள் ஒட்டப்பட்ட அனுமதி பெற்ற வாகனங்கள் மற்றும் எம்.டி.சி வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலை செல்லலாம், மற்ற வாகனங்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை சாலையில் வாகனங்களை நிறுத்தலாம்.

* அண்ணா சாலையில் இருந்து அனுமதி சீட்டு இல்லாமல் வரும் கார், மற்றும் இருசக்கர வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை சென்று கடற்கரை சாலையிலும், சுவாமி சிவானந்தா சாலையிலும் வாகனங்களை நிறுத்தலாம்.

* போர் நினைவு சின்னம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் சென்று சர்வீஸ் ரோடு சாலையிலும், சுவாமி சிவானந்தா சாலையிலும் நிறுத்தலாம்.

* காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் வழியாக சென்று சர்வீஸ் ரோடு சாலையிலும், சுவாமி சிவானந்தா சாலையிலும் வாகனங்களை நிறுத்தலாம். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Related Stories: