×

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளார்கள் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டிட தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பிறகு மக்களின் செல்வாக்கு இல்லாமலேயே ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மக்களை நேரடியாக சந்திக்கும் திராணி இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். அதற்கு ஏதாவது இட்டுக்கட்டிக் காரணம் கற்பிக்க வேண்டுமே என்பதற்காக திமுக மீது பழியைச் சுமத்தினர்.  
ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில், திமுக என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை, தயங்கியதுமில்லை. அதுவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை உரிய காலத்தில் திறம்பட நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை திமுக ஆட்சி போல பலப்படுத்திய அரசு தமிழகத்தில் வேறு கிடையாது.

தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டிருந்தாலும், அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மேலும், மேலும் குழப்பங்களை ஏற்படுத்தின. இந்தக் குழப்பங்கள் நீக்கப்பட்டு, ஜனநாயக நெறிமுறைகளின்படியும், அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உச்ச நீதிமன்றத்தை திமுக அணுகியது. அந்த வழக்கில், புதிய மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிக்குத் தடை விதித்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், குளறுபடிகளைச் சரிசெய்யாமல், அதே தேர்தல் தேதியை மீண்டும் அறிவித்த நிலையில்தான் தி.மு.க மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அந்த வழக்கில், 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுக்கின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஏதோ திமுகவுக்கு விழுந்த சம்மட்டி அடி என்பது போல நினைத்துக் கொண்டு ஓர் அமைச்சர் தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடுகிறார்.

அ.தி.மு.க. அரசு எத்தனை அத்துமீறல்கள் செய்திட நினைத்தாலும், மாநில தேர்தல் ஆணையத்துடன் சூழ்ச்சிகரமான கூட்டணி அமைத்துக்கொண்டு முறைகேடுகளுக்கு வழி வகுத்தாலும், மக்களின் பேராதரவு தி.மு.க அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமே இருக்கிறது. தி.மு.க சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சிகளில் மக்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றபோது, ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொட்டித் தீர்த்த கோபமும், தி.மு.க.மீது அவர்களுக்கு இருக்கிற கெட்டியான பற்றுதலும் மறக்க முடியாதது. தேர்தல் களத்திலும் அதுவே நிச்சயம் வெளிப்படும். அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்திடத் துடிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு தக்க பாடம் புகட்டிட தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தினாலும், அத்தனை கட்டத்திலும் அ.தி.மு.க. அடையப்போவது தோல்விதான். மக்கள் எழுதி வைத்திருக்கும் மகத்தான இந்தத் தீர்ப்பினை திமுக மாவட்டச் செயலாளர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தை சந்தித்திட ஆக்கபூர்வமான வியூகம் வகுத்திட வேண்டும். கடந்த மூன்று நாட்களாக நான் மாவட்ட செயலாளர்களிடம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடர்ந்து கலந்து பேசி வருகிறேன்.

இன்று (ேநற்று)காலை வரை, 11 மாவட்டக் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் நமது கூட்டணிக் கட்சிகளுடன் பேசி உடன்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக பட்டியலை தங்கள் மாவட்டக் கழகத்தின் மூலம் வெளியிட்டுவிட்டோம் என்ற சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். திமுக சார்பில் போட்டியிடக்கூடிய இடங்களில் மக்கள் நலனில் மிகுந்த அக்கறையும், மேலான வெற்றிவாய்ப்பும் உள்ள, அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்திருக்கும் வேட்பாளர்களை களமிறக்கிட வேண்டும்.கடந்தகால வெற்றியாயினும் தோல்வியாயினும் அது தரும் படிப்பினைகளை நுணுக்கமாகக் கற்றறிந்து கொள்ள வேண்டும். அலட்சியம் துளியுமின்றி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் முழுமையாகப் பெறுவதன் மூலம்தான், நம் வெற்றியின் இலக்கை அடைந்திட முடியும். சூதுமதியாளர்களாம் அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும்போது, விரைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். என்றும் நாம் மக்கள் பக்கம் நிற்போம். எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம். வீணர்தம் கொட்டம் அடக்குவோம். விவேகமும் வேகமும் நிறைந்த பணியை விரைந்தாற்றுவோம்.

Tags : AIADMK ,Tamil ,government ,election ,MK Stalin ,volunteers ,elections , Tamil Nadu people ready , AIADMK government ,local elections
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...