5 மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு இல்லை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகளின்  ஓய்வு பெறும் வயது 58 ஆகும். ஆனால், சிறப்பாக பணியாற்றும் நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு அவர்களின் பணி விபரங்கள் குறித்து விசாரித்து கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும். இதனால், மாவட்ட நீதிபதிகள் 60 வயது வரை பணியாற்றி ஓய்வு பெறுவார்கள். இந்த நிலையில், 58 வயதை எட்டியுள்ள மாவட்ட நீதிபதிகள் பலருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து உயர் நீதிமன்ற  நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது. இதில் தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு, மாவட்ட நீதிபதி தேவநாதன் என்பவருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மறுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு  உத்தரவிட்டது.

இதன்பின்னர், மேலும் சில மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், கன்னியாகுமரியில் குடும்பநல நீதிமன்ற  மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் கோமதிநாயகம், பிற ஊர்களில் பணியாற்றும் மாவட்ட நீதிபதிகள் தானேந்திரன், கணேசன், மீனா சதீஷ் ஆகியோருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மறுப்பு தெரிவித்து முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையில், உயர் நீதிமன்ற பதிவுத்துறை, சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது தொடர்பான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

Related Stories: