சென்னை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து, வடகிழக்கு மாநிலங்களைப்போல் வலுவான போராட்டம் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். வடசென்னை மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷமிட்டனர்.பின்னர், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாசிஷ அரசியலை பாஜ மேற்கொண்டு வருகிறது, வெறுப்பு அரசியல் நடத்தி வருகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி நீண்டகால கனவு திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. நீண்டநாள் பிரச்னையாக அயோத்தி ராமர் கோயில் இருந்தது. தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களை புறக்கணிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதை மாநிலங்களவை, மக்களைவையில் நிறைவேற்றியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது என்பது மதத்தையும் நாட்டையும் கூறுபோடும் செயலாகும்.