பொங்கலூர்: மகள்கள் கவனிக்க தவறியதால் மனவேதனை அடைந்த முதிய தம்பதி பிஏபி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (80). இவரது மனைவி சுப்பாத்தாள்(75). இத்தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். பண்டிகை அல்லது திருவிழா காலங்களில் மட்டும் மூன்று மகள்கள் குடும்பத்தினரும் சித்தநாயக்கன்பாளையம் வந்து தங்களது பெற்றோர்களை பார்த்து செல்வது வழக்கம். வயது முதிர்ந்த தம்பதியினர் இருவரும் பெற்ற மகள்கள், குடும்பத்தினர் தங்களை கண்டு கொள்ளாத காரணத்தால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இவர்கள் தங்கியிருந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. காளிமுத்து, சுப்பாத்தாள் ஆகியோரின் நடமாட்டமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காமநாயக்கன்பாளையம் போலீசுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.