3 மகள்கள் இருந்தும் கவனிக்காததால் விரக்திபிஏபி வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி தற்கொலை: பல்லடம் அருகே பரிதாபம்

பொங்கலூர்: மகள்கள் கவனிக்க தவறியதால் மனவேதனை அடைந்த முதிய தம்பதி பிஏபி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (80). இவரது மனைவி சுப்பாத்தாள்(75). இத்தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். பண்டிகை அல்லது திருவிழா காலங்களில் மட்டும் மூன்று மகள்கள் குடும்பத்தினரும் சித்தநாயக்கன்பாளையம்  வந்து தங்களது பெற்றோர்களை பார்த்து செல்வது வழக்கம். வயது முதிர்ந்த தம்பதியினர் இருவரும் பெற்ற மகள்கள், குடும்பத்தினர் தங்களை கண்டு கொள்ளாத காரணத்தால் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக இவர்கள் தங்கியிருந்த வீடு திறக்கப்படாமல் இருந்தது. காளிமுத்து, சுப்பாத்தாள் ஆகியோரின் நடமாட்டமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், காமநாயக்கன்பாளையம் போலீசுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

 இந்தநிலையில் பல்லடம் அருகே வாவிபாளையம் பிஏபி வாய்க்காலில் நேற்று ஒரு ஆண், ஒரு பெண்ணின் உடல்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலங்களை மீட்டனர். அப்போது அந்த ஆணும், பெண்ணும் காளிமுத்து, சுப்பாத்தாள் என்பது தெரியவந்தது. மகள்கள் கவனிக்காததால் தம்பதியர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களது சடலங்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியினரியே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: