விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக 2 பெண் ஏட்டுக்கள் உள்ளிட்ட 3 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று அருள் என்பவர் 3ம் நம்பர் லாட்டரியால், கடன் பிரச்னை ஏற்பட்டதாக கூறி 3 மகள்கள், மனைவியை விஷம் கொடுத்து கொன்று தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் அருள் பேசிய வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து மூன்று நம்பர் லாட்டரி விற்பனை கும்பலை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் நகர காவல்நிலையத்தில் பெண் ஏட்டுக்கள் விஜயா, எழிலரசி மற்றும் செஞ்சி காவல்நிலைய ஏட்டு செல்வம் ஆகியோர் லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்று பேரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.