குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய பாஜ அரசு அதிரடியாக  குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.  அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மத, சாதி, இன, மொழி, பால் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமாக மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய மக்களை மத அடிப்படையில் கூறு போடும் பேராபத்தினை உருவாக்கியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பேராபத்தினை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 16ம் தேதி(நாளை) மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சிபிஐஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் காதர்மொகிதீன், இந்து குழுமம் தலைவர் என்.ராம், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ஊடகவியலாளர் ஜென்.ராம், பேராசிரியர் மார்க்ஸ், நக்கீரன் கோபால், ஜவஹர், வைகை உள்ளிட்ட பலரும் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: