டெல்லி: இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாடி வருகின்றனர். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக தொழில் துறையில் உற்பத்திகள் குறைந்து வேலைவாய்ப்புகள் பறிபோய் இருப்பதாகவும் காங்கிரஸ் கூறி வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா, காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கம், விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை போன்றவற்றை கண்டித்து “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற தலைப்பில் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ப.சிதம்பரம், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். டெல்லி, உத்திரப்பிரதேசம், ஹரியானா, உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.