உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5வது நாளாக 1,025 பேர் வேட்புமனு தாக்கல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 5 வது நாளாக நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் ஆயிரத்து 25 பேர் மனு தாக்கல் செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் என்பது முதல் கட்டமாக வரும்27 ந்தேதி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் , 2ம் கட்டமாக 30 ந் தேதி நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் நன்னிலம் ஆகிய5 ஒன்றியங்களுக்கும் என தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இதற்கான வேட்புமனு தாக்கல் என்பது கடந்த 9ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 804 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் வரையில் மொத்தம் ஆயிரத்து 58 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.மேலும் நேற்று 5வது நாளாக நடைபெற்ற மனுத்தாக்கலையொட்டி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 8 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 119 பேரும் மற்றும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 650 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 248 பேர் என மொத்தம் ஆயிரத்து 25 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 5 நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 83 பேர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: