அக்காவுக்கு ஜாதக பொருத்தம் இல்லை எனக்கூறி 7ம் வகுப்பு மாணவிக்கு கட்டாய திருமணம் : தாலியை கழற்றி வைத்துவிட்டு பள்ளிக்கு சென்றவர் காப்பகத்தில் சேர்ப்பு

வேலூர்: அக்காவுக்கு ஜாதக பொ வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் அக்காவுக்கு சித்தூரில் உள்ள உறவினர் மகனை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்க காட்பாடி வந்து ஜாதக பொருத்தம் பார்த்துள்ளனர். அப்போது மூத்த மகளுக்கு ஜாதகம் சரியில்லை. இளைய மகளுக்கு பொருந்துவதாக தெரிந்துள்ளது. இதனால் இளைய மகளான 7ம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதனையறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். ‘எனக்கு திருமணம் வேண்டாம், தொடர்ந்து படிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.  அதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் சிறுமியை கட்டாயப்படுத்தி சித்தூர் அழைத்துச் சென்று கடந்த 6ம் தேதி கடப்பகுண்டாவில் உள்ள வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து 8ம் தேதி மாணவியும், திருமணம் செய்துகொண்ட வாலிபரும் காட்பாடிக்கு வந்துள்ளனர். பின்னர் மாணவி கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்த தகவல் அறிந்த வேலூர் மாவட்ட குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் மற்றும் விருதம்பட்டு போலீசார், மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அதில், மாணவிக்கு கட்டாய திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியை கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாணவியை அழைத்துச் சென்ற அதிகாரிகள் அப்துல்லாபுரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் மாணவியை சேர்த்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: