திருச்சி: ஆபாச படம் பார்த்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். படங்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்த பாலோயர்களான டாக்டர்கள், தொழிலதிபர்கள் உள்பட 15 பேரை கைது செய்ய தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். திருச்சி காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42). இவர் செல்போனில் பெண் குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்த்ததுடன், அந்த படங்களை சமூக வலைதலங்களில் தனது பாலோயர்களுக்கும் அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரது பேஸ்புக், வாட்ஸ்அப்பை முடக்கினர்.நேற்றுமுன்தினம் காலை அவரது வீட்டுக்கு சென்ற கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் அதிரடியாக சென்று கிறிஸ்டோபரை கைது செய்து போக்சோ சட்டப்படியும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படியும் வழக்குப்பதிந்தனர். திருச்சி மகிளா நீதிமன்றத்தில் கிறிஸ்டோபர் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆபாச படம் பார்த்ததாக தமிழகத்திலேயே முதல் கைதாக கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.