சொத்து குவிப்பு புகார் அமைச்சருக்கு எதிரான வழக்கில் ஆவணங்களை வழங்க உத்தரவு

மதுரை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை, தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கடந்த 2011 தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில், வருமான வரி வரம்புக்குள் தனது வருமானம் இல்லையென கூறியிருந்தார். 18.88 லட்சத்துக்கு அசையும் சொத்து, 19.11 லட்சத்துக்கு அசையா சொத்து உள்ளதாக தெரிவித்திருந்தார். இதன்பிறகு பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் வாங்கியுள்ளார். தனது அமைச்சர் பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து ேசர்த்துள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்ததார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, புகாரின் மீதான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாகக் கூறி, வழக்கு தொடர்பான ஆவணங்களும் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் சென்னையில் இருந்தபடி விசாரித்தனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பல பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இருதரப்பு வாதங்கள் நடந்தது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் உள்ளன. அந்த ஆவணங்கள் அனைத்தையும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்ற பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: