டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இந்தியாவில் மேற்கொள்ள இருந்த 3 நாள் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கவுகாத்தியில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய இருந்தார். இதற்காக நாளை அவர் டெல்லி வர இருந்தார். ஆனால், அசாம் போராட்டம் காரணமாக, பாதுகாப்பு கருதி அவருடைய இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.