புதுடெல்லி: தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளதை அடுத்து இரண்டாவது எமர்ஜென்சி அமலில் உள்ளதா? என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டெரக் ஓ பிரைன் விமர்சித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றது. இது தொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. இந்நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையானது, கடந்த புதனன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடு மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், வன்முறையை தூண்டும் வகையிலும், தேசவிரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையிலான எதையும் ஒளிப்பரப்பாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.