டெல்லி: இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான நிதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலை ஊக்குவிக்கவும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறைக்கு மொத்தம் ரூ.4.47 லட்சம் கோடி கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. நுகர்வை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல் அளித்துள்ளார்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசுத்துறை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்த ரூ.61,000 கோடி பட்டுவாடா செய்யப்பட்டது. நடப்பு ஆண்டின் அரசு மூலதனச் செலவு இலக்கான ரூ.3.38 லட்சம் கோடியில் இதுவரை 66% நிதி செலவிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்துத்துறைகள் மூலம் ரூ.2.46 லட்சம் கோடிக்கு மூலதனத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தடைப்பட்டு நிற்கும் வீட்டுவசதி திட்டங்களை முடிக்க ரூ.25,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
பணவீக்க விகிதம் உயர்வு, தொழில் உற்பத்தி சரிவு என்ற எதிர்மறை செய்திகள் வந்த போதிலும் பங்குச்சந்தைகள் பெரும் ஏற்றம் அடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்து 41,010 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 115 புள்ளிகள் அதிகரித்து 12,087 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.