ஐஐடி மாணவி பாத்திமா வழக்கை தமிழக அரசு விரும்பினால் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கலாம் : உயர்நீதிமன்றம்

சென்னை: ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா உயிரிழந்த வழக்கில் தமிழக அரசு விரும்பினால் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கலாம் என்று சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியின் இந்த மரணம் ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த தகவலின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதனிடையே 2006 முதல் தற்போது வரை சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கேரளாவை சேர்ந்த சலீ்ம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஐடி மாணவி பாத்திமா வழக்கை, தமிழக அரசு விரும்பினால் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கலாம் என்றும், ஐஐடி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: