டெல்லி: நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 18ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாதிகள் 5 பேர் இயந்திர துப்பாக்கிகளுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வரிசையாக அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பின்னர், நாடாளுமன்றத்திற்கு ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினரும், நாடாளுமன்ற பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் டெல்லி காவல்துறையினர் 5 பேர், மத்திய ரிசர்வ் காவல்படை பெண் காவலர், நாடாளுமன்ற பாதுகாவலர்கள் இருவர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 18 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.