சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநகராட்சி பணிகளில் ஆற்று மணலுக்கு பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தி ஊழல் செய்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாநகராட்சி பணிகளில் உலகவங்கி நிதியுதவியோடு நடைபெறும் திட்டங்களில் ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு செய்யப்படுவதை குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ஆனால் ஆய்வில் ஆற்று மணலுக்கு பதில் எம்.சாண்ட் பயன்படுத்தி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உழலுக்கு துணை போகும் அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகளும் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் என்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இத்துறையின் அமைச்சராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி மீது, ஏற்கெனவே உள்ளாட்சி ஊழல்கள் குறித்து, திமுகவின் சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும், 349 டெண்டர்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 48 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தனியாகவே ஒரு காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்து, டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதையும் அறிக்கையில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.