சென்னை: சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணைக் கோரி இந்திய தேசிய மாணவர் சங்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவின் விசாரணையின் போது, சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக தமிழக அரசு தெரிவித்தது. அரசின் இந்த விளக்கத்தை ஏற்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.
ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம்
சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியின் இந்த மரணம் ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த தகவலின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு
இந்த வழக்கில் காவல்துறையும் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக பாத்திமாவின் தந்தையும் பேட்டியளித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி யில் 5 மாணவர்கள் இதே போல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர்.தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக அரசு விளக்கம்
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருவதாகவும், அதில் சிபிஐ-யில் பணியாற்றிய இருவர் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மனுதாரர் அமைப்பு அரசியல் கட்சியை சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.அப்போது நீதிபதிகள், நடவடிக்கை எடுக்கவில்லை என எப்போது மனு கொடுக்கப்பட்டது என்றும், அதற்கான அத்தாட்சி நகல் எங்கே என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் நவம்பர் 18ல் புகார் அனுப்பியதாகவும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
நீதிபதிகள் அறிவுறுத்தல்
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அப்போது, மனுதாரர் போதிய ஆவணங்களுடன் மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் அதே நேரத்தில், மாணவர்கள் அதிக மன அழுத்தத்துடன் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு ஐஐடி நிர்வாகம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.