×

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான பேரணி: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உள்பட ஏரளாமானோர் கைது

சென்னை: சிறுபான்மையினரை பாதிக்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்தும், அதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும் திமுக சார்பில் இன்றைய தினம் மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டமானது நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னையில் பிரம்மாண்ட பேரணியானது நடைபெற்றது. தற்போது தென்சென்னை மாவட்ட திமுக சார்பில் சைதாப்பேட்டையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் திமுக  இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சுமார் 600க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். தென்சென்னை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து இந்த பேரணியானது தொடங்கியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அதற்கு ஆதரவு தெரிவித்து தமிழர்களை முழுவதுமாக புறம்தள்ளியுள்ள அதிமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

தமிழர்களை முழுவதுமாக புறக்கணிக்கும் முடிவாகவே இந்த மசோதா உள்ளது என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணியை தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழவுள்ளது. அதில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, திமுக நிர்வாகிகள் முன்பு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், சட்டதிருத்தத்தை ஆதரித்த அதிமுகவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து ஆற்காடு பேருந்து நிலையத்தில் குடியுரிமை சட்டதிருத்தத்தை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

இதனைப்போலவே மதுரை பேருந்து நிலையம் மற்றும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  திமுகவினர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர், பவானியில் திமுக இளைஞர் அணி சார்பில் குடியுரிமை சட்டதிருத்தத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்த சட்ட நகலை கிழித்து போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலினுடன் திமுக இளைஞர் அணி சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Udayanidhi ,DMK , Citizenship Bill, rally, DMK youth team secretary Udayanidhi arrested
× RELATED திருச்செந்தூரில் திமுக வேட்பாளர்...