சென்னை: இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் தினகரன் நாளிதழின், ‘மாபெரும் உணவுத் திருவிழா’ சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கியது. நம் அனைவருக்கும் ருசியான உணவுகளை உட்கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். இட்லி, தோசை, பொங்கல், மசால் தோசை, பணியாரம், வெள்ளை பணியாரம் போன்றவை மட்டும் அல்லாது, தற்போது வளர்ந்து வரும் நாகரிகத்தின் காரணமாக வெளிநாடுகளின் உணவுமுறைகளை பலரும் பின்பற்றுகின்றனர். இதில், பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற உணவு வகைகள் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இதை கிராமப்புறத்தில் வசிப்பவர்களை விட, நகர்புறங்களின் வசிக்கும் மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் அத்தகைய உணவுப்பொருட்களை விற்பனை செய்வதற்காக, சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ஓட்டல்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். தற்போதை காலக்கட்டத்தில் இந்த முறை உணவுகள் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கிறது. இதன் விளைவாக வீட்டில் இருந்தபடியே, தங்களது மொபைல் போனில் ஆர்டர் செய்து, விருப்பப்பட்ட உணவுகளை பலரும் சாப்பிடும் வசதியும் வந்துவிட்டது.
இருப்பினும் பெரும்பாலான மக்கள், தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பொருட்களை இன்னும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்கு துரித உணவுகளை உட்கொள்வதால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுவதும் ஒருகாரணமாகும். இதனால் கம்பு, கொள்ளு, சாமை, குதிரைவாலி, தினை போன்வற்றில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் ஓட்டல்களும் ஒருபுறம் பெருகி வருகிறது. எனவே இதனைக்கருத்தில் கொண்டு தினகரன் நாளிதழ் சார்பில் ‘மாபெரும் உணவுத் திருவிழா’ (சென்னை மெகா புட் பஜார்) இன்று முதல் டிச.15ம் தேதி வரை நடக்கிறது.
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் இத்திருவிழாவில், பொதுமக்களுக்கு அனுமதி இலவம். இதில் இயற்கை உணவு பொருட்கள், ஆர்கானிக் உணவு பொருட்கள், ஊட்டச்சத்து உணவு தயாரிப்புகள், குளிர்பான தயாரிப்புகள், மசாலா தயாரிப்புகள் போன்றவை இடம்பெறுகிறது. மேலும் இதில் இந்தியாவின் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.