அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம் எதிரொலி : ஜப்பான் பிரதமர் இந்திய வருகை ரத்து?

புதுடெல்லி: அசாமில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடைபெறுவதால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து என தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை சட்ட மசோதா இரண்டு அவையிலும் வெற்றி பெற்றதால், அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜ கட்சி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடந்த புதன் கிழமை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து வியாழக்கிழமை மாநிலங்கள் அவையிலும் வெற்றி பெற்றது.

இம்மசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மக்களவையில் மசோதா நிறைவேறியதும், பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று முன்தினம் மசோதா நிறைவேறிய நிலையில், போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், அசாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடை உத்தரவை மீறி நேற்றும் அசாமில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கவுகாத்தியின் லாலங் கயான் பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சாலையில் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

அப்போது, போராட்டக்காரர்களை விரட்டியபோது போலீசார் மீது சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமானது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டிச.15-ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு நடைபெற இருந்தது. அசாமில் நிலவும் பதற்றம் போராட்டம் காரணமாக ஜப்பான் பிரதமரின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: