புதுடெல்லி: ஆன்லைனில் குழந்தைகளை பாதிக்கும் ஆபாச பட பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தற்காக அமைக்கப்பட்ட எம்.பி.க்கள் குழு, சிறப்புக் குழுவாக மாற்றப்பட்டுள்ளது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் கல்வி தொடர்பான சந்தேகங்களை இன்டர்நெட்டில்தான் இப்போது அதிகமாக தேடுகின்றனர். அப்போது, ஆபாச படங்களும் அதிகளவில் குறுக்கிடுகின்றன. இது குழந்தைகளை பாதிப்பதாக உள்ளது. எனவே, இந்த ஆன்லைன் ஆபாச படங்கள் பிரச்னைகள் குறித்து ஆராய கடந்த 5ம் தேதி எம்.பி.க்கள் குழு அமைக்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் ஒருங்கிணைப்பாளராக உள்ள இந்த முறைசாரா குழுவில், 10 கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.க்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு பலமுறை கூடி, ஆபாச படங்களால் குழந்தைகள் பாதிப்பதை தடுப்பது குறித்து ஆலோசித்தது. இக்குழு முறைசார குழுவாக இருப்பதால், சில அமைப்பினரை சந்தித்து பேசுவதில் சிக்கல் ஏற்பட்டது.