குழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது: போலீசார் விசாரணை

சென்னை: குழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி லாவண்யா (28). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன், ராஜேஷ் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் அண்ணாதுரை (32) என்பவரிடம் சிகிச்சை பெற்றார். சில நாட்களில் நோய் குணமடைந்தது.

இதையடுத்து, தனக்கு குழந்தை பிறக்காததால், அதற்கான சிகிச்சை குறித்து அண்ணாதுரையிடம் ராஜேஷ் கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘ஆயுர்வேத சிகிச்சை பெற்றால், ஒரே மாதத்தில் குழந்தை பிறக்கும்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் மற்றும் லாவண்யாவை வரவழைத்து அண்ணாதுரை பரிசோதித்துள்ளார். இதையடுத்து, ‘ஒரு மாதம் கழித்து வாருங்கள், குழந்தை பிறப்புக்கான சிறப்பு மருந்து தருகிறேன்’’ என்று கூறி தம்பதியை அனுப்பி வைத்தார். இந்நிலையில், ராஜேசை தொடர்பு கொண்ட அண்ணாதுரை, ‘சிறப்பு மருந்து வந்துள்ளது. அதை வாங்கிச் செல்லுங்கள்’’ என்று கூறியுள்ளார். அதை வாங்குவதற்காக, லாவண்யாவை நேற்று முன்தினம் மாலை அனுப்பி வைத்துள்ளார் ராஜேஷ். அதன்படி கிளினிக் சென்ற லாவண்யாவிடம், ‘உங்களை பரிசோதனை செய்ய வேண்டும்’’ என்று கூறி கிளினிக்கில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்ற அண்ணாதுரை, அங்கு, லாவண்யாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து அலறியடித்து ஓடினார். பின்னர் இதுகுறித்து தனது கணவரிடம் தகவல் அளித்தார். மேலும், இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் அவர் புகார் செய்தார். கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ராஜா மேற்பார்வையில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று காலை அண்ணாதுரையை கைது செய்தனர். வேறு பெண்களிடம் இதுபோன்ற பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: